முச்சங்க வரலாறுஅறிமுகம்தமிழ் இலக்கியம் நீண்ட நெடும் மரபு உடையது. அதன் இலக்கிய, இலக்கண நீர்மைகள் பழமையானது.
வளஞ்செறிந்த தமிழ் நலஞ்சிறந்த இலக்கியத்தாலும் பெருமையுடையது ஆகும்.கி.பி. இரண்டாம் நூற்றாண்டு தொடங்கி, இன்றைய நாள் வரைக்கும் தோன்றிய இலக்கிய வகைகள் கணக்கிலடங்கா.
தொன்மையான இலக்கியம் வழியே தமிழரின் நாகரிகம், பண்பாடு, மொழிவளம் முதலியவற்றை அறிந்து கொள்கிறோம். அதேபோல ஒவ்வொரு கால கட்டத்திலும் தோன்றிய இலக்கிய வகைகளால் அவ்வக்கால மக்கள் வாழ்வையும், பிறவற்றையும் புரிந்து கொள்ளலாம்.
இவ்வகையில் இலக்கியம் அவ்வக் கால கட்டத்தைக் காட்டும் காலக்கண்ணாடி எனலாம்.சங்க காலம், சங்கம் மருவிய காலம், பல்லவர் காலம், சோழர் காலம், நாயக்கர் காலம், ஐரோப்பியர் காலம், இக்காலம் என்று கால வரிசையில் இலக்கியம் வளர்ந்த வரலாற்றை அறிஞர் எடுத்துக்காட்டுவர்.மூன்று சங்கங்கள் வைத்து முத்தமிழை வளர்த்தனர் பாண்டிய மன்னர்கள் என்ற செய்தி பரம்பரை பரம்பரையாகச் சொல்லப்பட்டு வருகிறது.
பழைய இலக்கிய, இலக்கண உரையாசிரியர்கள், தம் உரைகளில் முச்சங்கங்கள் பற்றி ஆங்காங்கே குறிப்பிட்டுள்ளனர். அவர்களுள் முச்சங்கம் பற்றி விரிவான விளக்கம் தருபவர் இறையனார் களவியலுரை ஆசிரியர் நக்கீரர். கி.பி.3-ம் நூற்றாண்டில் நக்கீரரால் கூறப்பட்ட உரை. 14 தலைமுறைகள் வாய் வழியாகச் சொல்லப்பட்டுப் பின் கி.பி.8-ம் நூற்றாண்டில் முசிறி நீலகண்டரால் ஏட்டில் எடுத்து எழுதப்பட்டது என்பர்.
