சிம்மவிஷ்ணுவின் மகன் மகேந்திரவர்மன் ஆவான். இவன் ஆட்சிக்காலத்தின் முதற் பகுதியில் சமணமும், பிற் பகுதியில் சைவமும் உயர்நிலைக்கு வந்தன.
குகைக் கோயில்களையும், பாறைக் கோயில்களையும் இவன் அமைத்தான். இவன் காலத்தில் பல்லவ சாளுக்கியப் போர் உச்சநிலை பெற்றது.
150 ஆண்டுகள் வரை போர்கள் நடைபெற்றன. (சிற்பம், ஓவியம், இசை, நாடகம் முதலிய கலைகள் வளர்ச்சியடைந்தன.]மகேந்திரவர்மன் முதலில் சமணனாக இருந்து பின் சைவனாக மாறியவன் எனப் பெரிய புராணம் கூறுகிறது.
லிங்கத்தை வழிபடும் குணபரன் என்னும் பெயர் கொண்ட அரசன் இந்த லிங்கத்தினால் புறச்சமயத்திலிருந்து திரும்பியஞானம் உலகத்தில் நீண்டநாள் நிலை நிற்பதாக என்று திருச்சிராப்பள்ளி மலைக் கோயில் கல்வெட்டும் இதனையே கூறுகிறது.
வல்லம், தளவானூர், சீயமங்கலம், பல்லாவரம், திருச்சிராப்பள்ளி முதலிய இடங்களில் சிவன் கோயில்களையும் மகேந்திரவாடியில் பெருமாள் கோயிலையும் இவன் அமைத்துள்ளான்) மகேந்திரவர்மன் ஆட்சியில் தொண்டை நாட்டோடு சைவ சமய வளர்ச்சி நிற்காமல் புதுக்கோட்டை வரை பரவியிருந்தது.
மகேந்திரவர்மனுக்கு வழங்கிய பட்டப் பெயர்கள் வருமாறு:
குணபரன், அவனிபாஜனன், லலிதாங்குரன், சத்திய சந்தன், விசித்திர சித்தன், (சிற்ப ஓவியக் கலைஞன்), நரேந்திரன் சேத்தகாரி (கோயில்கள் அமைத்தவன்), போத்தரையன், சத்துருமல்லன், மகாப்பிடுகு (பகைவர்மேல் இடியைப் போலப் பாய்பவன்), நயபரன், கலகப்பிரியன் (போர்ப் பிரியன்), மத்த விலாசன், அநித்யராகள் (நடன இசைக் கலைகளில் அறிஞன்), சங்கீரண சாதி, உதாரசித்தன், அலுப்தகாமன் (கலப்புப் பிறவி கண்டவன்; புதிய தாள வகைகளான சங்க கீரணம் என்பதனைக் கண்டவன்).
இசை, ஓவியம், கட்டடம், சிற்பம் ஆகிய கலைகளை இவன் வளர்த்தான். தானே ‘மத்தவிலாசப் பிரகசனம்’ என்னும் வட மொழி நாடக நூலை இயற்றினான்.
